இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மேடி கிரீன் சதம் விளாசினார். இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள் ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வெறும் 46.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹர்ஷிதா சமரவிக்ரமா 59 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஹன்னா ரோவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.