குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 65 பேர் நேற்று முன் தினம் தங் மாவட்டம் சபுதரா கட் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு அனைவரும் மாலை பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மலைப்பகுதியில் இருந்து சுற்றுலா பஸ் கீழே இறங்கியுள்ளது. இதை பஸ்சில் இருந்த சுற்றுலா பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது, மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பஸ்சில் பயணம் செய்த சுற்றுலா பயணியின் செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் மலைப்பகுதியில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.