பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக்கோரி அரசுக்கு எதிராக தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) சமீபகாலமாக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கைபர்பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவருக்கு நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. 9 பெட்டிகளை கொண்ட ரெயிலில் சுமார் 500 பயணிகள் இருந்தனர்.
பலுசிஸ்தானின் போலன் மாவட்டத்தில் குடாலார் மற்றும் பிறுகோனேரி நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் சிலர் ரெயில் டிரைவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் டிரைவர் காயமடைந்ததை அடுத்து, ரெயில் ஆள்அரவமற்ற பகுதியில் நின்றது. அதன் பின்னர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டவாறு ரெயிலில் ஏறினர்.
ரெயிலில் இருந்த பாதுகாப்பு படையினர் 6 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் ரெயிலை கடத்தியதாக கூறப்பட்டது. மேலும் ரெயிலில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகளை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளிடம் சிக்கிய பணய கைதிகளை மீட்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதில் பயங்கரவாதிகளுடன் இரவு முழுவதும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் சுமார் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடும் போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பு படை வீரர்கள் ரெயிலில் இருந்த பணயக் கைதிகள் 155 பேரை மீட்டுக் கொண்டு வந்தனர். அதே சமயம், இன்னும் 214 பேர் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் இருக்கும் தங்கள் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக பாகிஸ்தான் அரசுக்கு பயங்கரவாதிகள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.