இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யு.பி.ஐ. (UPI) மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பணப்பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யு.பி.ஐ. சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நாடு தழுவிய அளவில் யு.பி.ஐ. சேவைகள் செயலிழந்ததால், கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
யு.பி.ஐ. சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக இரவு 7 மணி முதல் யு.பி.ஐ. செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளதாக பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.