ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை நிலநடுக்கம் தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.
அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.