இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டில் இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்தி போது முதன்மை (நம்பர் 1) பந்துவீச்சாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்கு வெற்றிகளையும் பெற்றுக் கொடுக்கிறார். கடந்த முறை கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணிக்காக சிறந்த பங்களிப்பனை வழங்கினார்.
மிடில் ஓவர்களில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் 29 வயதில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தற்போது ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார். இந்தியாவில் அடுத்த டி20 உலக கோப்பை நடைபெறும் போது அதில் முதன்மை (நம்பர் 1) பந்துவீச்சாளராக இவரே இருப்பார். இவரை எதிர்த்து விளையாடுவது கடினமாக இருக்கும். அனைத்து சுழற் பந்துவீச்சாளர்களையும் விட்டுவிட்டு இவர் விரைவில் நம்பர் ஒன் வீரராக மாறுவார்.
அவரது பந்துவீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். நிறைய பந்துகளை ஸ்டம்ப் லைனுக்கு நேராக வீசுகிறார். கூக்லி பந்துகளை முன்பு நிறைய வீசுவார். ஆனால், இப்போது லெக் ஸ்பின் கற்றுக் கொண்டார். முன்பை விட இப்போது பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.