பிரேசில் நாட்டின் தெற்கே சாவோ பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, வானில் இருந்து மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியது. இதனை விமான பயணியான பெர்ன்ஹார்டு வார் என்பவர் வீடியோவாக படம் பிடித்துள்ளார். இதுபற்றி வார் கூறும்போது, பெரிய புயல் ஒன்று வீசியது. இதனால், விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாங்களும் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம். இது புகைப்படம் எடுப்பதற்கான சரியான தருணம் என உணர்ந்தேன்.
அப்போது, நாங்கள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தபோது, விமான நிலைய தரை பகுதியருகே மின்னல் தாக்கியது. அது விமான வால் பகுதியையும் தாக்கியபோது படம் பிடித்தேன் என தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை வர்த்தக விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும் என தெரிவித்தது. மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால், விமானத்தின் புறப்பாடு தாமதம் அடைந்தது. பயணிகளும் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் பாதிப்புக்கு ஆளானார்கள்.