சாந்தனின் புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் நேற்று (04) விதைக்கப்பட்டது.
இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடிரென உயிரிழந்திருந்தார்.
சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாயகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடலுக்கு பல்வேறு இடங்களிலும் பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் திரளுடன் நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.
எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீருடன் சாந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.